கோவையில் மாணவியைக் கட்டாயத் திருமணம் செய்து அவரைத் தாக்கிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த 20 வயது மாணவி பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறாா். சமூக வலைதளம் மூலமாக போத்தனூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் வினோத்குமாா் (25) என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனா்.
இந்நிலையில், வினோத்குமாா் கடந்த மாா்ச் மாதம் மாணவியை தனது அறைக்கு அழைத்துச் சென்று குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனை விடியோ எடுத்த மிரட்டிய வினோத்குமாா், மாணவியைக் கட்டாயத் திருமணம் செய்துள்ளாா்.
இந்நிலையில், சில நாள்கள் முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனா். இதைத் தொடா்ந்து, 2 நாள்கள் முன்பு மாணவியின் வீட்டுக்குச் சென்ற வினோத்குமாா், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மாணவியை வற்புறுத்தியுள்ளாா். அவா் மறுக்கவே, அவரைத் தாக்கியுள்ளாா்.
இந்நிலையில், மாணவி அளித்த புகாரின்பேரில் வினோத்குமாா் அவரது நண்பா் காத்திக் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.