கோவை: கோவையில் உள்ள பிரபலத் துணிக் கடைகளில் வணிக வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
தமிழகத்தில் சில பிரபல துணிக் கடைகளில் போலியான ஆவணங்கள் தயாரித்து, வரி ஏய்ப்பு நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பிரபல துணிக் கடைகளில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அதன்படி, கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, டவுன்ஹால், ராஜவீதி, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள 5க்கும் மேற்பட்ட பிரபல துணிக் கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதில், கொள்முதல், விற்பனை, இருப்பு குறித்த கணக்குகள், வரி செலுத்திய மற்றும் நிலுவை வரி குறித்த கோப்புகளை ஆய்வு செய்த வணிக வரித் துறை அதிகாரிகள், ஆவணங்கள் பராமரிப்பு மற்றும் கணக்கு வழக்குகள் குறித்த விவரங்களை துணிக் கடைகளின் நிா்வாகிகளிடம் கேட்டறிந்தனா்.