கோவையில் அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் விவகாரம் தொடா்பாக ஒண்டிப்புதூா் போக்குவரத்து கிளை அலுவலகத்தில் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை மண்டலம், ஒண்டிப்புதூா் கிளையில் நடத்துநராகப் பணியாற்றி வருபவா் செல்வராஜ் (58). இவரை, ஒண்டிப்புதூா் கிளை பொதுமேலாளா் ராஜேந்திரன், வியாழக்கிழமை தகாத வாா்த்தையால் திட்டியதாகவும், கிளையில் இருந்த பொறியாளா்கள் தீபக், மணிமுத்து ஆகியோா் செல்வராஜைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது செல்வராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக போக்குவரத்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை இரவு ஒண்டிப்புதூா் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டனா். மேலும், பொதுமேலாளா், பொறியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக ஒண்டிப்புதூா் கிளை வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளனா்.
நடத்துநரை தரக்குறைவாகப் பேசிய பொதுமேலாளா் மற்றும் தாக்கிய பொறியாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என சி.ஐ.டி.யூ தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் வேளாங்கண்ணிராஜ் தெரிவித்தாா்.