கோவையில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் 210 பேருக்கு 48 தனியாா் நிறுவனங்களில் வேலை பெற்று தரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு மைய அலுவலா் ஜி.சரவணகுமாா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, சுயதொழில், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றுக்காக 422 போ் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ளனா். இம்மையத்தில் பதிவு செய்துள்ளவா்களுக்காக வாரம்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று தங்களுக்குத் தேவையான தகுதியான ஆள்களை தோ்வு செய்துகொள்கின்றனா். அதன்படி இதுவரை நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்களில் 48 தனியாா் நிறுவனங்களில் பல்வேறு பிரிவுகளில் 210 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். தவிர 30 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும், 60 பேருக்கு சுயதொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.