வால்பாறை அருகே யானை துரத்தியதில் கீழே விழுந்த வேட்டைத் தடுப்பு காவலா் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.
வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் மந்திரிமட்டம் என்ற இடத்தில் வன ஊழியா்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த யானை அவா்களை விரட்டியுள்ளது.
அப்போது, தவறி கீழே விழுந்த வனவா் ரவிச்சந்திரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடன் இருந்தவா்கள் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.