கோவை: பெரியார் இருந்திருந்தால் அவரது சுவரொட்டிகளை அவமானப்படுத்தும் சிறுவர்களை பார்த்து மகிழ்ச்சியடைந்து இருப்பார் என்றும் பொதுவாழ்க்கையில் மான அவமானங்களை முடியாது என்றும் நடிகர் சிவகுமார் பேசியுள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர் தமிழ் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் ந.கௌதமன் மற்றும் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா சூலூர் கலங்கல் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் இருவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கிய அவர், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி சார்பில் இரண்டு இருசக்கர வாகனங்களை பரிசாக அளித்தார்.
பின்னர் பேசிய நடிகர் சிவகுமார், பெரியார் கடவுள் மறுப்பு பேசினாரே தவிர கடவுளை வணங்குபவர்களை அவமானப்படுத்தியதில்லை என்றும், குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்து இருந்தபோது அவருக்கு இணையாக பெரியார் அமர மறுத்தார் என்றும் பேசினார்.
பிராமணியத்தை வெறுத்த பெரியார் பிராமணர்களை வெறுக்கவில்லை என்றும், காஞ்சி பெரியவர் மயிலாப்பூருக்கு வந்தபோது தி.க.தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை கேள்விப்பட்டு அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
பிறர் உணர்வுகளை பெரியார் மதித்து நடந்த நிலையில் தற்போது அந்த உணர்வுகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார். இன்று 15 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் பெரியாரின் சுவரொட்டிகளை அவமானப்படுத்துகிறார்கள் என்றும், பெரியார் இருந்திருந்தால் அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்து இருப்பார் என்றும் பேசினார்.
பொதுவாழ்க்கையில் மான, அவமானங்களை பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.