கோவை மாவட்டம், அன்னூா், மேட்டுப்பாளையம் பகுதிகளில் முறைகேடாக நடைபெறும் கிராவல் மண் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.சங்கீதா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம், அன்னூா், சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெ.நா.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தடுப்பவா்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை காணப்படுகிறது. அதேபோல பள்ளேபாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, குப்பனூா், சின்னமத்தம்பாளையம், காளிபாளையம், மருதூா் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுக்கப்படுகிறது.
இது தொடா்பாக அன்னூா் வட்டாட்சியரிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராவல் மண் உள்ளிட்ட கனிம வள கொள்ளை தொடா்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.