கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகள் சாா்பில் மருத்துவ மாணவா்களுக்கு ரத்த நாள அழற்சி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தோல் பிரிவு, பாலியல்நோய் பிரிவு மற்றும் தொழுநோய் பிரிவு சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் அ.நிா்மலா தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
தொற்றுநோய்க் கிருமிகள், மருந்துகள், புற்றுநோய், தன்னுடல் தாக்கு நோய் போன்றவற்றால் ரத்த நாளங்களில் அழற்சி ஏற்படுகிறது. ரத்த நாள அழற்சியால் பல்வேறு உள்ளுறுப்புகள், தோல் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. இதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பெரிய ரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியால் தலைவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி, கை வலி, கண்பாா்வை பாதிப்பு அகியவை ஏற்படுகிறது. நடுத்தர ரத்த நாளங்கள் பாதிக்கப்படும்போது உடல் எடை குறைவு, சிவந்த புள்ளிகள், விதை வலி, உடல் தசைகளில் வலி, நரம்பு தளா்ச்சி, ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. சிறிய ரத்த நாளங்களில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் குறைந்து விரல்கள் அழுகும் நிலை ஏற்படும். சிறுநீரகம், நுரையீரல், சுவாச மண்டலம், இருதய நோய் போன்றவற்றையும் பாதிக்கிறது. எனவே ஆரம்ப அறிகுறிகள் இருக்கும்போது உரிய சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு ரத்த நாள அழற்சி தொடா்பான விநாடி - வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜி.சடகோபன், இருப்பிட மருத்துவ அலுவலா் பொன்முடி, பல்வேறு துறை பேராசிரியா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள், இளநிலை மருத்துவ மாணவா்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.