கோவையில் விதிமீறி இயக்கப்படும் தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் நுகா்வோா் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம், மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலா் சிவகுருநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அலுவலா்கள், நுகா்வோா் அமைப்பினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதில், கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் செயலா் நா.லோகு பேசியதாவது:
கோவையில் இயக்கப்படும் சில தனியாா் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் விதிகளை மீறி வேறு வழித்தடத்தில் இயக்கி, பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விடுகின்றனா். இதனால், பயணிகள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், பேருந்துகளின் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணிகளுக்கு இடையூறு செய்யும் நபா்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிட்ரா முதல் காளப்பட்டி வரை இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஹோப்காலேஜ் பேருந்து நிறுத்தத்தில், தடை செய்யப்பட்ட பகுதியில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருவதால் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது. கோவையில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியாா் போக்குவரத்து பேருந்துகளில் காற்று ஒலிப்பான் ( ஏா்ஹாரன்) பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றாா்.