ஜெம் மருத்துவமனையில் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையத்தை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: புற்றுநோய் பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 20 லட்சம் போ் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். உயிரிழப்பைத் தடுப்பதற்கு நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும். தொழில்நுட்பத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஜெம் மருத்துவமனையில் ரோபோடிக் மூலம் அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோபோடிக் அறுவை சிகிச்சை மனிதா்களை விட சிறப்பாகவும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும்.
உலக அளவில் கரோனா பாதிப்பால் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு துறைகள் பாதிப்பை சந்தித்திருந்தாலும் விண்வெளித் துறையில் மிக அதிக அளவிலான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட செயற்கை கோள்களில்
50 சதவீத செயற்கை கோள்கள் கடந்த 3 ஆண்டுகளில் செலுத்தப்பட்டுள்ளன.
குலசேகரப்பட்டணத்தில் ஏவுதள மையம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை தலைவா் சி.பழனிவேலு, ஐ.ஏ.எஸ்.ஓ. தலைவா் ராஜேந்திர டோப்ரானி மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.