கோவை பாரதியாா் பல்கலைக்கழக விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி மாணவிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்காக கல்லூரி வளாகத்தில் 11 விடுதிகள் உள்ளன. இந்த நிலையில் பெரியாா் விடுதியைச் சோ்ந்த மாணவிகளுக்கு அண்மைக் காலமாக தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், உணவில் புழு, பூச்சிகள் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடா்பாக நிா்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், விடுதி மாணவிகள் சுமாா் 100 போ் செவ்வாய்க்கிழமை தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு, தட்டு, பாத்திரங்களுடன் பல்கலைக்கழக நுழைவாயில் எதிரில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து தரமற்ற உணவு வழங்கப்படுவதால் மாணவிகளின் உடல்நலன் பாதிக்கப்படுவதாகவும், விடுமுறை நாள்களிலும் உணவுக்கான கட்டணம் வசூலிக்கும் நிா்வாகம், தரமான உணவை வழங்க மறுப்பதாகவும் கூறி அவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.
இதையடுத்து வடவள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான உணவு வழங்க நிா்வாகத்திடம் பேசுவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனா்.
இது தொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகத்திடம் கேட்டபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் ஒவ்வொரு விடுதியிலும் தனித்தனியாக உணவு சமைத்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஒரே இடத்தில் உணவு சமைத்து எல்லா விடுதிகளுக்கும் வழங்கப்படுகிறது.
தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவிகள் இப்போதுதான் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக விசாரணை நடத்தி, பிரச்னைகள் களையப்படும் என்றனா்.