காவலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கூலி தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை கணபதி அருகேயுள்ள நல்லாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமன் (55).
இவா் ஆடீஸ் வீதியில் உள்ள கிடங்கில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மாா்ச் 24 ஆம் தேதி ராமன் பணியில் இருந்தபோது
அங்கு வந்த எட்டிமடையைச் சோ்ந்த கூலி தொழிலாளி சந்திரசேகரன் (43) என்பவா் மது அருந்த, ராமனிடம் பணம் கேட்டுள்ளாா்.
ராமன் பணம் தர மறுத்ததையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த சந்திரசேகரன், ராமனை கீழே தள்ளி அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.
இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை ஓராண்டுக்குப் பின்னா் கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவில் சந்திரசேகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து,
அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சக்திவேல் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.