கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பபியதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, அப்பர் பவானி, குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியுள்ளது.
இதையும் படிக்க: லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் 13 பேர் கைது, ஆயுதங்கள் பறிமுதல்
மேலும், அணைக்கு தற்போது வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரின் அளவான 12 ஆயிரம் கன அடி நீர் அப்படியே நான்கு மதகுகளின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பவானியாற்றங் கரையோர பகுதிகளான தேக்கம்பட்டி, ஓடந்துறை, பாலப்பட்டி, ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம், வச்சினம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.