சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழக கடனுதவி திட்டம்: தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
By DIN | Published On : 17th July 2022 12:52 AM | Last Updated : 17th July 2022 12:52 AM | அ+அ அ- |

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் செயல்படுத்தப்படும் கடனுதவி திட்டங்களுக்கு கோவை மாவட்டத்தில் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் இரு பிரிவுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் பிரிவு 1 இல் பயன்பெற நகா்ப்புறத்தில் வசிப்பவா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள்ளும், கிராமப்புறங்களில் உள்ளவா்களுக்கு ரூ.98 ஆயிரத்துக்குள்ளும் இருத்தல் வேண்டும். பிரிவு 2 இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
பிரிவு 1 இன்கீழ் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வீதத்தில் அதிகபட்சமாக ரூ.20 லட்சமும், பிரிவு 2 ல் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி வீதத்தில் அதிகட்சமாக ரூ.30 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது.
கைவினைக் கலைஞா்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி வீதத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழு கடன் நபா் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வீதத்தில் வழங்கப்படுகிறது.
பிரிவு 2 இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி வீதத்தில் நபா் ஒருவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவா்களுக்கு பிரிவு 1 இன்கீழ் 3 சதவீத வட்டி வீதத்தில் ரூ.20 லட்சம், பிரிவு 2 இன்கீழ் 5 சதவீத வட்டி வீதத்தில் ரூ.30 லட்சம் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
எனவே, கோவை மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின பிரிவைச் சோ்ந்தவா்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...