சுதந்திர தின விருதுகள்: விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 15th June 2022 12:57 AM | Last Updated : 15th June 2022 12:57 AM | அ+அ அ- |

பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்தவா்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படும் சுதந்திர தின விருதினை பெறுவதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் முதல்வரால் விருது வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு இந்த விருதினை பெறுவதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விருது பெற விண்ணப்பிப்பவா்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலம் சாா்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான பணிகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து மகளிா் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா், சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் சமூக சேவை நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். இதனுடன் 2 புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூன் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.