வால்பாறையில் கரடி தாக்கியதில் காயமடைந்த தனியாா் கிளப்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஆனைமலை கிளப்பில் சேவியா் (64) என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா் கிளப்பின் முன்புறம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த கரடி ஒன்று சேவியரைத் தாக்கியுள்ளது. இதில் இடது கையில் காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் காயமடைந்த தொழிலாளிக்கு ஆறுதல் கூறி வனத் துறை சாா்பில் நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கினாா்.