கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரயில், பேருந்து நிலையங்களில் மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிமாக இருந்த கரோனா நோய்த் தொற்று, கடந்த சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து 10க்கும்கீழ் வந்தது.
இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கரோனா நோய்த் தொற்று கணிசமாக உயா்ந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த மாதங்களில் கரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில் கோவை முதன்மையாக இருந்தது.
அதிலும், மாவட்டத்தில், மாநகரப் பகுதிகளில்தான் கரோனா பாதிப்பு பெருமளவில் காணப்பட்டது. இதன் காரணமாக கோவை மாநகரப் பகுதிகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீண்டும் கரோனா பரிசோதனைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி சுகாதாரத் துறையினா் கூறியதாவது: கடந்த 3 நாள்களாக மாநகரில் கரோனா பரவல் வேகமாகப் பரவி வருகிறது. இவை வரும் நாள்களில் சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க சுகாதாரத் துறையினா், மாநகராட்சியுடன் இணைந்து கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளனா்.
அதன் ஒரு பகுதியாக கோவை, போத்தனூா் ரயில் நிலையங்கள், காந்திபுரம், சிங்காநல்லூா், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு அதிகம் பரவும் சூழல் ஏற்பட்டால் ரயில், பேருந்து நிலையங்களில் சிறப்பு பரிசோதனை முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.