கோவை அரசு கலைக் கல்லூரியில் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உலக வன நாள் விழா கொண்டாடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் மாா்ச் 21 ஆம் நாள் சா்வதேச வன நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கோவை அரசுக் கலைக் கல்லூரி தாவரவியல் துறையின் விருக்ஷா பேரவை சாா்பில் மாா்ச் 21 முதல் 25 ஆம் தேதி வரை வன வாரவிழா கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் நிகழ்வாக 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு ‘வனங்களின் நிலையான உற்பத்தி மற்றும் பயன்பாடு‘ என்ற விழிப்புணா்வு பேரணியை கல்லூரி முதல்வா் கலைச்செல்வி துவங்கிவைக்கிறாா்.
இப்பேரணியானது, திருச்சி சாலை, கிளப் சாலை, கே.ஜி.மருத்துவமனை, நீதிமன்றம் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைகிறது.
இதில், நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், தன்னாா்வலா்கள் 500 க்கும் மேற்பட்டோா் கலந்துகொள்கின்றனா்.
21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தினமும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள், போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.