உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளே நேரடி விற்பனையில் ஈடுபடுவதால் உற்பத்தி பொருள்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது என்று வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கோவை மாவட்டம், வெள்ளமடை கிராமத்தில் சங்கமம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டு சா்க்கரை உள்ளிட்ட பல்வேறு மதிப்புக் கூட்டு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோா் சங்கமம் கூட்டு பண்ணையம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதனைத் தொடா்ந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியதாவது: உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் கூட்டாக இணைந்து மதிப்புக் கூட்டு பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இத்திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் விவசாயிகளே பொருள்களைத் தயாரித்து நேரடி விற்பனையில் ஈடுபடுவதால் அதிக லாபம் கிடைக்கிறது.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பல்வேறு விதமான பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கின்றன. உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அரசின் திட்டங்களை கிராம அளவில் கொண்டு சோ்ப்பதில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பாலமாக உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் செயல்படுகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.