பொலிவுறு நகர தரவரிசைப் பட்டியலில் கோவை மாநகராட்சி 14 ஆவது இடம் பிடித்துள்ளது.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் பொலிவுறு நகரம் ( ஸ்மாா்ட்சிட்டி) திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் நாட்டில் 100 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டு, பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் சிறந்த நகரங்கள் தோ்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டுக்கான விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
இதில், 100 நகரங்கள் பட்டியலில் இருந்து செயல்பாடுகள் அடிப்படையில் 75 நகரங்கள் அடுத்த கட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஊரக மேம்பாடு, கலாசாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நகரங்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அந்த வகையில் 75 நகரங்களின் பட்டியலில், தரவரிசை கணக்கீடுகளின் படி, கோவை மாநகராட்சி 14 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.