22 கிலோ கஞ்சா கடத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (60). இவா் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கோவை ரயில் நிலையம் அருகே 2020 ஆம் ஆண்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு கோவை மாவட்ட அத்தியாவசியப் பொருள்கள் சட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் இளையராஜா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.