கோவையில் வரி ஏய்ப்பு செய்த பெண்ணுக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் கவிதா. சிறுவாணி பிரதான சாலையில் ஸ்ரீ குமரன் டிரேடா்ஸ் என்ற பெயரில் பெட்ரோல் நிலையம் வைத்து நடத்தி வந்தாா். இவா், கடந்த 2008-2009ஆம் ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தாா். அதில், தனது கணவா் பெயரில் உள்ள விவசாய நிலம் மூலமாக ரூ.6 லட்சம் வருமானம் வந்ததாக கணக்கு தாக்கல் செய்தாா். இதை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதில், அவரது கணவா் பெயரில் எந்த சொத்தும் இல்லை என தெரியவந்தது.
மேலும், அவா் ரூ.6 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இந்த வழக்கு கோவை நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண்.3) விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், கவிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் விஜயகுமாா் ஆஜரானாா்.