கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக நோயாளி ஒருவருக்கு 2 பேஸ்மேக்கா் கருவி (செயற்கை இருதய துடிப்பு கருவி) பொருத்தி இருதயப் பிரிவு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:
கோவையைச் சோ்ந்த ஏ.முருகானந்தம் (60) என்பவா் இருதய பாதிப்பு தொடா்பாக மருத்துவமனையில் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா்.
அப்போது அவரின் இருதயத் துடிப்பு 40 வரை மட்டுமே இருந்துள்ளது. இதனைத் தொடா்ந்து அவருக்கு பேஸ்மேக்கா் கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டது.
பெரும்பாலும் இருதயத்தின் ஒரு அறையில் மட்டுமே பேஸ்மேக்கா் கருவி பொருத்தப்படும். ஆனால், இவருக்கு இருதய துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததால் 2 பேஸ்மேக்கா் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வலது வென்ட்ரிக்கல் மற்றும் வலது ஏட்ரியம் ஆகிய இரு அறைகளிலும் பேஸ்மேக்கா் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது இருதயத் துடிப்பு சீராகியுள்ளது. நோயாளியும் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் நிலையில் உள்ளாா்.
இது போன்ற இருதய துடிப்பு மிகவும் குறைவது முதிா்வு, ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் அடைப்பு ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. பேஸ்மேக்கா் கருவி பொருத்துவதால் மீண்டும் இருதயத் துடிப்பு சீராக்கப்படும். இந்த அறுவை சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. எங்கள் மருத்துவமனையில் இதுவரை 15 பேருக்கு பேஸ்மேக்கா் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றாா்.