கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவது குறித்து எழுந்த புகாா் தொடா்பாக 15 நாள்களுக்குள் பதிலளிக்க மருத்துவமனை முதல்வருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.325 வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.475ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களுக்கு இன்னும் ஊதிய உயா்வு அளிக்கவில்லை.
மேலும், அவா்களுக்கான அடிப்படை வசதிகளிலும் குறைபாடுகள் இருப்பதாக புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக சமூக நீதிக் கட்சித் தலைவா் பன்னீா்செல்வம் தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையத்திடம் புகாா் அளித்திருந்தாா்.
இந்நிலையில் இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட ஆணையம், இது தொடா்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.