கோவையில் பாகுபலி யானையை விரட்டிய தெரு நாய்! மிரண்டு ஓடிய யானை
மேட்டுப்பாளையத்தில் உலா வரும் பாகுபலி யானையை தெருநாய் ஒன்று குரைத்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை காட்டு யானை விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனை அப்பகுதி மக்கள் பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகுபலி யாணையினை ஆபரேஷன் பாகுபலி என்ற திட்டத்தின் மூலம் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி 3 கும்கி யானைகளை வரவழைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நேற்று அதிகாலை தேக்கம்பட்டி அடுத்துள்ள சமயபுரம் கிராமத்திற்குள் பாகுபலி யானை உலா வந்தது. அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று யானையைக் கண்டு அச்சப்படாமல் குரைத்து விரட்டியது. இதில் பயந்துபோன யானை பிளறியபடி ஓடியது.
இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.