கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் இருந்து கணபதி நோக்கி 5 மாத கைக்குழந்தை மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையுடன் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது கணபதி பகுதியில் இருந்து மணியகாரம்பாளையம் பகுதி நோக்கி அதிவேகமாக வந்த கார்(மாருதி 800) இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சென்றது. தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிக்க- அஜித்குமார் 62: புதிய இயக்குநர் யார்?
அதில் அந்தக் கார் வரும்போதே அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் மேற்கொண்டு எடுத்துச் சென்றுள்ளார். காரை நிறுத்த அங்கிருந்தவர்கள் முற்பட்டும் காரை வேகமாக செலுத்தி நிற்காமல் சென்றுள்ளார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் காயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது அந்தக் காரை சரவணம்பட்டி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.