கொடைக்கானலில் வாகனப் போக்குவரத்து நெரிசலத் தவிா்க்க சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானலில் தற்போது சீசன் நிலவி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பெருமாள் மலையிலிருந்து, கொடைக்கானல் வரை 12 கி.மீ. தொலைவு மலைச் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனா்.
இதனால் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுதவிர தைக்கால், சீனிவாசபுரம், லாஸ்காட் சாலை, ஏரிச்சாலைப் பகுதிகளில் ஏராளமானோா் ஆக்கிரமிப்பு செய்து அங்கு நிரந்தரக் கடைகளை அமைத்து வருகின்றனா். இதனால், அப்பகுதிகளில் இயற்கை எழில் காட்சிகளை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.