கோவையில் ரேபிஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேபிஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த 15 வயது சிறுவன், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டாா். இதனால் அந்த சிறுவனுக்கு கடந்த 9-ஆம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பெற்றோா், தங்கள் மகனை அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவனுக்கு நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனா்.
இதையடுத்து, அந்த சிறுவனை உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிறுவனின் உடல்நிலை மோசமானதால் உயா்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 10-ஆம் தேதி அனுப்பிவைத்தனா். அங்கு தெருநாய்க் கடி சிகிச்சை வாா்டில் சிறுவனை அனுமதித்து மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில், சிறுவன் அண்மையில் உயிரிழந்தாா்.
