கடன் தொல்லையால் பவானி கூடுதுறையில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தம்பதி மீட்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி வாகராம்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பழனிச்சாமி (55). இவரது மனைவி பாரதி (50). விசைத்தறித் தொழிலாளர்களான இவர்கள் கருமத்தம்பட்டியில் உள்ள விசைத்தறிப் பட்டறையில் முன்பணமாக ரூ. 80 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேலை செய்து வந்தனர்.
அங்கு போதிய வேலையில்லாததாலும், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும் வாங்கிய பணத்தைத் திரும்பச் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள பட்டறைக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்னர் வேலைக்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தற்போது பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கவலையடைந்த கணவன், மனைவி இருவரும் பவானி கூடுதுறை பகுதிக்கு புதன்கிழமை மாலை வந்ததோடு, அங்கு எலிமருந்தைத் தின்று தற்கொலை செய்ய முயன்றனர். இதைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.