"மூடநம்பிக்கையால் அழிந்து வரும் தேவாங்கு'

சென்னிமலை அருகே சிக்கிய தேவாங்கு வனத் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.  

சென்னிமலை அருகே சிக்கிய தேவாங்கு வனத் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.  
 சென்னிமலையை அடுத்த பசுவபட்டி பிரிவு அருகே விவசாய பண்ணை உள்ளது. அங்கு, தேவாங்கு செடி மறைவில் இருந்துள்ளது. இதைப் பிடித்த அப்பகுதி இளைஞர்கள் சென்னிமலை வனவர் தேவராஜுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற அவர் வனத்தில் இருந்து தவறி அல்லது உணவு தேடி வந்திருக்கலாம் என்று தெரிவித்தார். பின்னர், அந்த தேவாங்கு மீட்கப்பட்டு அந்தியூர் வனப் பகுதியில் விடப்பட்டது. 
 இதுகுறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:
 சென்னிமலை வனப் பகுதியில் தேவாங்கு இனம் தற்போது குறைந்துவிட்டது. அடர்ந்த வனப் பகுதியில் மட்டுமே இருக்கிறது. இந்த விலங்கு குரங்குபோல மனிதர்களிடம் எளிதில் பழகும். மருத்துவ குணம் கொண்டது என்ற மூடநம்பிக்கையால் தேவாங்கு இனம் வெகுவாக அழிக்கப்பட்டுவிட்டது. 1,700 ஹெக்டேர் பரப்பு கொண்ட சென்னிமலை வனத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தேவாங்குகள் அதிகம் வாழ்ந்தன. பெரும்பாலும் இரவில் மட்டுமே உணவு தேடி வெளியே வரும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது.
 பகலில் மரத்தின் இடுக்கு, பொந்துகளில் படுத்துக் கொள்ளும். இதனால் எளிதில் தென்படாது. பூச்சிகளையே பெரும்பாலும் உண்ணும். தேவாங்கால் பூச்சிகள் அதிக அளவில் கட்டுப்படுத்தப்படுவதால் பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கும். விதை பரவலிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனாலும், தேவாங்கின் ஒவ்வொரு உடலுறுப்பும் மருத்துவ குணமுடையது என்ற மூடநம்பிக்கையால் அழிந்து வருகிறது. செல்லப் பிராணியாக வளர்க்கவும், மந்திரித்து கயிறு தரவும் ஒரு சிலர் தேவாங்கை பயன்படுத்துகின்றனர். 
 இதன் எண்ணிக்கையை அதிகரிக்க வனத் துறை மூலம் முயற்சி செய்யப்படுகிறது. இதற்காக வனப்பகுதியோரம் அமைந்துள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com