ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (டிசம்பர் 20) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மு.சீனிஅஜ்மல்கான் வெளியிட்ட தகவல்:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்காக சிறப்பு முகாம் வியாழக்கிழமை (டிசம்பர் 20) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை ஈரோடு மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அதில், அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த மனை உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆன்லைனில் கடந்த 16.11.2018 தேதிக்கு முன்னதாக ரூ. 500 செலுத்தி பதிவு செய்தவர்கள் மட்டும் தங்களுடைய மனையின் கிரையப் பத்திரம், மனைப் பிரிவு வரைப்படங்கள் 4 நகல், அடையாள அட்டை, அண்மையில் பெறப்பட்ட வில்லங்கச் சான்று ஆகியவற்றுடன் கலந்துகொண்டு மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.