கள் இயக்க கோரிக்கைகளை ஏற்காவிட்டால் சென்னையில் அசுவமேத யாகம் நடத்தப்படும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறினார்.
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் பனை, தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணத்தை அதன் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கோவையில் திங்கள்கிழமை தொடங்கினார். கோவையில் இருந்து ஈரோடு வந்த அவர் மேலும் கூறியதாவது:
கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இது உலகளாவிய நடைமுறையாகும். எனவே, 30 ஆண்டுகால கள் தடையை நீக்க வேண்டும். நிபந்தனைகள் இல்லாமல் நீரா இறக்கி, உள்நாட்டிலும், உலக அளவிலும் அரசின் தலையீடு இல்லாமல் சந்தைப்படுத்தினால் திட்டம் முழுமையாக வெற்றி அடையும்.
பனை, தென்னை கருப்பட்டிக்கு மானியம் கொடுத்து ரேஷன் கடைகளில் அவற்றை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். கலப்படம் செய்வோருக்கு கருணை காட்டாமல் கடும் தண்டனை விதிக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இருந்து சென்னை வரை பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.
எங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கையை ஏற்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் ஜனவரி 21 ஆம் தேதி சென்னையில் அசுவமேத யாகம் நடத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றார்.