மலேசியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்டப் போட்டியில் இந்தியா சார்பிலும், தமிழகம் சார்பிலும் பங்கேற்ற ஈரோடு சிலம்பக் கழக மாணவர்கள் 2 பேர் தங்கம், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
மலேசியா நாட்டில் சிலம்பப் போர்க்கலை கவுன்சில் சார்பில், சர்வதேச சிலம்பாட்டப் போட்டிகள் டிசம்பர் 15 , 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில், இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 15 நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில், பள்ளி விளையாட்டுத் துறை, தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற அகில இந்திய சிலம்பக் கழகம் சார்பில் இந்திய அணியில், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பி.சூர்யா, அகில் ஆகியோர் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான சப் ஜூனியர் பிரிவில், தனித்திறன் போட்டிகளில் கலந்துகொண்டனர். பல்வேறு சுற்றுகளில் வென்ற பி.சூர்யா (13) இறுதிப் போட்டியில் முதலிடம் வென்று தங்கப் பதக்கத்தையும், அகில் (11) மூன்றாவது இடம்பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை அகில இந்திய, தமிழக சிலம்பாட்டக் கழகத் தலைவர் மு. ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்தினர். மாவட்டச் செயலாளர் ஆர்.கந்தவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.