பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு, ரயில்வே காலனியில் உள்ள ரயில்வே மருத்துவமனை வளாகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் களியபெருமாள், கோட்டத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தண்டவாள பராமரிப்புப் பணியாளர்கள் (டிராக்மேன்) உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு பதவி உயர்வு வழங்கியவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பராமரிப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.