ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பொது நூலகத் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நூலகர்களுக்கான உரிய ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
சில்லறை செலவினத்தில் ஊதியம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.செல்வம் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.பாஸ்கரன், சி.சுப்பிரமணியன், மாநில நிர்வாகிகள் கி. மகேஸ்வரி, ஆ.சாந்தி, மா.ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் த.இளங்கோ, பொருளாளர் சு. குணசேகரன் ஆகியோர் பேசினர். இதில், மாவட்டச் செயலாளர் ஓ.எஸ்.விவேகானந்தன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.பாஸ்கர்பாபு, செயலாளர் கே. வெங்கிடு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.