ஈரோடு மண்டலத்துக்கு மொத்தம் 112 புதிய பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு, காசிபாளையத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில், ஈரோடு எம்.பி. எஸ்.செல்வகுமார சின்னையன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (மேற்கு), கே.எஸ்.தென்னரசு (கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி) ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், 5 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மேலும் பேசியதாவது:
ஈரோடு மண்டலத்துக்கு மொத்தம் 112 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுவரை 51 பேருந்துகள் ஏற்கெனவே இயக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் 5 பேருந்துகளின் சேவைகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளின் கட்டமைப்புகள் முடிவுற்றவுடன் எஞ்சியுள்ள 56 பேருந்துகளும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
இந்த 5 புதிய பேருந்துகள், கோபி - திருச்சி வழித்தடத்திலும், பெருந்துறை - கோவை வழித்தடத்திலும், கரூர் - திருச்சி வழித்தடத்திலும், ஈரோடு - பொள்ளாச்சி வழித்தடத்திலும், ஈரோடு - சிவகாசி வழித்தடத்திலும் இயக்கப்படுகின்றன.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை), ஈரோடு மண்டல பொது மேலாளர் சேனாதிபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.