ஈரோடு அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் குளம்போல கழிவுநீர் தேங்கியிருந்ததால், மாணவர்கள் நலன் கருதி அப்பள்ளியை ஒருவார காலத்துக்கு மூட மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சீனாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரிச்மாண்ட் மெட்ரிக், சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் திறந்த நிலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சுகாதாரத் துறை அலுவலர், பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி சனிக்கிழமை கள ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, பள்ளியின் பின்புறம் கழிவுநீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் உருவாகி மாணவர்கள் நலன் பாதிக்கப்படும் சூழ்நிலை உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர்களின் நலன் கருதி மேற்படி பள்ளிக்குத் தற்காலிகமாக ஒரு வார காலத்துக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில் பள்ளி தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தகவல் தெரிவித்துள்ளார்.