அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக 2 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் தற்காலிகமாக 2 ஆயிரம் ஆசிரியர்கள் ரூ. 7,500 ஊதியத்தில் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் ஜேசிஐ - ஈரோடு எக்ஸெல் பதிப்பகம், சென்னை வேதா அகாதெமி இணைந்து நடத்திய நல்லாசிரியர்கள் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியதாவது:
தாளவாடி அருகே உள்ள பள்ளியில் கன்னடம் வகுப்பு எடுக்க ஆசிரியர்கள் உள்ளனர். தமிழ் வகுப்புக்கு ஆசிரியர் இல்லை என கவனத்துக்கு வந்தது. அதுபோன்ற பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ரூ. 7,500 ஊதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் விரைவில் 2 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விடுத்த வேண்டுகோளின்படி, உடனடியாக தொழிலதிபர்கள் சார்பில் ரூ. 3 கோடிக்கு மேல் நிதி கிடைத்துள்ளது. பல நிறுவனங்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ் போன்றவற்றை அமைத்துத் தர சம்மதித்துள்ளனர்.
மாநில அளவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் தை பொங்கலுக்குள் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வர்ணம் அடிக்கப்படும். அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 1,500 கோடி வழங்க வேண்டி உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ரூ. 102 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மத்திய அரசிடம் நாங்கள் பேசி மேலும் ரூ. 500 கோடியை விரைவில் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில், மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி, வேளாளர் கல்வி நிலையங்களின் செயலர் எஸ்.டி.சந்திரசேகர், ஜேசிஐ மண்டல துணைத் தலைவர் கே.கனிவளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.