மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டதால் தமிழகம் - கர்நாடகம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப் பகுதி திகனாரையில் நோயாளியை ஏற்றிக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திங்கிழமை இரவு சென்றது. அங்கு நோயாளியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மீண்டும் ஆசனூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
தமிழக கர்நாடக எல்லையான காராப்பள்ளம் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 108 ஆம்புலன்ஸில் இருந்து புகை வருவதைப் பார்த்த ஓட்டுநர் வெற்றிவேல், மருத்துவ உதவியாளர் சங்கர் ஆகியோர் கீழே இறங்கி ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆம்புலன்ஸ் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்தது தெரியவந்தது. தொடர்ந்து, ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆம்புலன்ஸில் தீ வேகமாகப் பரவி நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பாய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.