சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் பவானி ஆற்றங்கரையோரம் பாதிக்கப்பட்ட 45 பேர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ரூ. 1.75 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளத்தால் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள பாத்திமா நகர், அண்ணா நகர், கோட்டுவீராம்பாளையம், சின்னவீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன. இதனால், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வீடுகளை இழந்து வாடும் மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், பாத்திமா நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கட்சியின் மாநில செயலாளர் ஏ.ஃபயாஸ் அஹமது தலைமை வகித்து, நிவாரணப் பொருள்களை வழங்கினார். வீடுகளை இழந்த குடும்பத்துக்கு தலா ரூ. 10 ஆயிரமும், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, இதர பொருள்கள் ரூ. 1.75 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட செயலாளர் எஸ்.சுலைமான், நகர செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.