மதிமுகவின் மாநில மாநாடு ஈரோடு, பெருந்துறை சாலை, மூலக்கடையில் சனிக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெறவுள்ளது.
அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொதுவாழ்வு பொன் விழா என முப்பெரும் விழா மாநாடு சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. மாநாட்டுக்கு திருப்பூர் துரைசாமி தலைமை வகிக்கிறார். மாநாட்டு அரங்கை முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி திறந்துவைக்கிறார். கருணாநிதியின் உருவப் படத்தை திமுக பொருளாளர் துரைமுருகன் திறந்து வைத்துப் பேசுகிறார்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பொன் விழா மலரை வெளியிடுகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டுப் பட்டயம் வழங்கிப் பேசுகிறார். தொடர்ந்து, மாலையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திரைப்பட நடிகர் சத்யராஜ், ஆகியோரும் பங்கேற்கின்றனர். இதையடுத்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஏற்புரையாற்றுகிறார்.