ரஃபேல் விமான விலையை மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில், ரஃபேல் போர் விமானம் கொள்முதல் ஊழலைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரஃபேல் போர் விமானங்கள் ரூ. 520 கோடியில் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தப் போர் விமானங்களை ரூ. 1,500 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் போர் விமான விலை குறித்து கேட்டால் மழுப்பலான பதிலைக் கூறுவதோடு, ராணுவ ரகசியம் வெளியில் தெரிவிக்க முடியாது என்கிறார்.
விமானங்களின் விலையைக் கூறுவதில் தவறு கிடையாது.
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மன்னித்துவிட்டனர். இவர்களின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறுவது தவறான தகவல். ஈரோட்டில் இரண்டு மணி நேரமும், கிராமப்புறங்களில் நான்கு முதல் ஆறு மணி நேரமும் மின்தடை ஏற்பட்டு வருகிறது என்றார்.