பல்லடத்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சாய்பாநாயக் மகன் கிருஷ்ணநாயக் (32). இவர், திருப்பூர் மாவட்டம், பல்லடம், சின்னூர் பிரிவில் தனது மனைவி காமினி நாயக் (25), 3 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்த அவர் கஞ்சா விற்பனை செய்வதாக பல்லடம் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர்கிருஷ்ணநாயக்கைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18.5 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கிருஷ்ணநாயக் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.