கோபி அருகே கள்ளிப்பட்டி பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கச் சென்றபோது, ஆற்றில் மூழ்கிய மூவரில் ஒருவர் மீட்கப்பட்டார். இரண்டு இளைஞர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
கோபிசெட்டிபாளையம், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், மொடச்சூர், கரட்டடிபாளையம், குள்ளம்பாளையம், வெள்ளாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கிராமங்களில மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், மும்மூர்த்தி நகரில் இருந்து ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பவானி ஆற்றுக்கு விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மூன்று இளைஞர்கள் வந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்று நீரில் மூவரும் மூழ்கினர். இதில், நிதிஷ் (23) என்ற இளைஞரை கோபி தீயணைப்புத் துறையினர் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் செளந்தர் (21), அய்யாசாமி மகன் தமிழரசன் (16) ஆகியோரை தேடும் பணியில் கோபி தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். கன மழை, இரவு நேரமாகியதால் தேடுதல் பணியை நிறுத்திவிட்டு திரும்பியுள்ளனர்.