அரசியல் கட்சியினர், அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட சான்றிதழ் பெற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த குழுவானது வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் காட்சி ஊடகம், ரேடியோ(எப்.எம். பண்பலை அலைவரிசைகள்) மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் சான்று பெற்ற பின்னரே விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்குப் பதிவு நடைபெறும் முந்தைய நாளான ஏப்ரல் 17 ஆம் தேதியும், வாக்குப் பதிவு நடைபெறும் 18 ஆம் தேதியும் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, தனியார் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.
மேலும் அச்சு ஊடகங்களும் வாக்குப் பதிவு நடைபெறும் நாளும், முந்தை நாளும் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் சான்றொப்பம் இருப்பதை உறுதி செய்த பின்னரே விளம்பரங்கள் வெளியிட வேண்டும்.