மொடக்குறிச்சி ஒன்றியம், முத்துகவுண்டன்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிக்கு சொந்தமான 2 வீடுகளில் வருமான வரித் துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த முத்துகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. முத்துகவுண்டன்பாளையம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர். அதிமுக பிரமுகரான இவரது வீட்டில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்கு பணம் வைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து வருமான வரித் துறை அதிகாரி பிரபு தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் சின்னியம்பாளையத்தில் உள்ள அவரது அண்ணன் ராசு வீட்டில் திங்கள்கிழமை மதியம் திடீரென சோதனை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் எதுவும் சிக்காததால், ரவி வாடகைக்கு குடியிருக்கும், கரூர் புறவழிச்சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பணம் மற்றும் வேறு எந்த ஆவணங்களும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரிகள் சென்று விட்டனர்.
இந்த சோதனையின்போது மொடக்குறிச்சி கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் சேகர், மொடக்குறிச்சி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அசரப்புனிஷா, வருவாய் ஆய்வாளர் காயத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.