சத்தியமங்கலம் நகராட்சி 8 ஆவது வார்டில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் நகராட்சி, 8 ஆவது வார்டுக்குள்பட்ட அன்னையன் கிழக்கு வீதி, பாரஸ்ட் டிப்போ வீதி, தண்டுமாரியம்மன் கோயில் வீதி ஆகிய பகுதியில் 10 நாள்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட பெண்கள் சீரான குடிநீர் விநியோகிக்க கோரி காலிக் குடங்களுடன் சத்தியமங்கலம் வாரச் சந்தை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானபடுத்தினார். ஆனால் கோரிக்கை நிறைவேற்றுவதாக நகராட்சி அதிகாரிகள் உறுதியளிக்காமல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, பொதுமக்களுக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், சீராக குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டம் காரணமாக சத்தியமங்கலம், அத்தாணி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.