எப்போதும் நேர்மையானவனாக இருப்பேன்: அ.கணேசமூர்த்தி

எப்போதும் நேர்மையானவனாக இருப்பேன் என்று இறுதி கட்ட வாக்குசேகரிப்பில் திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி பேசினார்.

எப்போதும் நேர்மையானவனாக இருப்பேன் என்று இறுதி கட்ட வாக்குசேகரிப்பில் திமுக கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி பேசினார்.
 ஈரோடு மக்களவைத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் அ.கணேசமூர்த்தி ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா, அகில்மேடு வீதி, சின்னமார்க்கெட், ஈஸ்வரன் கோயில் வீதி, ஆர்கேசி ரோடு, நேதாஜி மார்க்கெட், கச்சேரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார். 
 அப்போது அவர் பேசியதாவது: 
மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழகத்தை கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் வஞ்சித்து வந்துள்ளது. இதைத் தட்டிக்கேட்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மோடிக்கு ஊதுகுழலாக இருந்து வருகின்றது. தமிழகத்தின் நலன்கள் எல்லாம் பறிபோய்விட்டன. 
மத்தியில் மோடி ஆட்சி தொடர்ந்து நீடித்தால் சமூக நீதி குழித் தோண்டி புதைக்கப்பட்டுவிடும். நான் ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த போது ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வாங்கிக்கொடுத்தேன். தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளேன். 
தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அரசின் திட்டப்பணிகளில் ஒரு நாளும் கமிஷன் வாங்கியது கிடையாது. கடைசி வரை நேர்மையாக இருப்பேன். உங்களில் ஒருவனாக நினைத்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார்.  
இறுதி கட்ட பிரசாரத்தையொட்டி ஈரோடு பெரியார் நகரில் இருந்து கூட்டணி கட்சியினர் பங்கேற்ற இருசக்கர வாகன பிரசாரம் மாநகர் முழுவதும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com