பிரசாரம் முடிந்த நேரத்தில் இருந்து வாக்குப் பதிவு முடிவடையும் வரையிலான காலத்தில் வேட்பாளர் 3 வாகனங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் வேட்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி வேட்பாளர்கள் பயன்பாட்டுக்காக ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்கான ஒரு வாகனம் மற்றும் அவரது பணியாளர்கள், கட்சி பணியாளர்களின் பயன்பாட்டுக்கான ஒரு வாகனம் என 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த வாகனங்களுக்கு மீண்டும் அனுமதி பெற வேண்டும். மேலும் வாக்காளர்களை வாக்களிப்பதற்காக வேட்பாளர்களோ அல்லது பிரதிநிதிகளோ அழைத்து வருவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
விதிமுறைகள் முறையாக பின்பற்றபடுகின்றனவா என்பதைக் கண்காணிக்க அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.