சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263 ஆவது பிறந்தநாளையொட்டி அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் மணி மண்டபம் உள்ளது.
இங்கு புதன்கிழமை நடைபெற்ற தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கலந்து கொண்டு தீரன் சின்னமலை உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், மாநில விவசாய அணித் தலைவர் தாராபுரம் சீனி, மாநில தகவல் தொடர்பாளர் ஹரிஹரன், பாமக மாநில துணைத் தலைவர் வடிவேல், கொங்குநாடு இளைஞர்கள் பேரவை மாநிலத் தலைவர் கோபால் ரமேஷ் கவுண்டர் உள்ளிட்டோர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.